Monday, April 20, 2020

பிரதோஷ வழிபாடு

பிரதோஷம் ஏற்பட்ட விதம்:

தேவேந்திரன் தனது வாகனத்தில் ஊர்வலமாக வந்துகொண்டிருக்க எதிரே துர்வாச முனிவர் வந்தார்.

எப்போதும் பிடி சாபம் என கூறும் அவர் தேவேந்த்ரரை பார்த்து அன்போடு ஒரு மாலையை கொடுத்து வாழ்த்த, தேவேந்திரன் அந்த மாலையை அலட்சியமாக யானை தலையில் வைக்க, யானை மாலையை காலில் போட்டு மிதித்தது.

அதை கண்ட துர்வாசர் , உனக்கு அவ்வளவு ஆனவமா? அதற்கு காரணமான அனைத்து செல்வங்களையும் இழக்க கடவாய் என சாபமிட்டார். அந்த சாபம் உடனே பலித்தது. செல்வங்களை இழந்தான்.

பாற்கடலை கடைந்தால்தான் இழந்த செல்வத்தினை மீண்டும் பெற முடியும் என்ற நிலையில் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைய முடிவு செய்தனர்.

மந்திர மலையை மத்தாக்கி வாசுகி பாம்பை கயிராக்கி,வாசுகியின் தலைப்பகுதியை அசுரர்களும் வால் பகுதியை தேவர்களும் கடைந்தனர். சோதனை போல் மந்திர மலை கடலில் மூழ்க, மஹாவிஷ்ணு கூர்மாவதராம் எடுத்து தாங்கி நிற்க விபரீதமாக ஆலகால விஷம் எழும்பியது.

அதன் கடுமையை தாங்காத அனைவரும் சிவபெருமானை வணங்கினர். எங்களை காக்க வேண்டும் என வேண்டினர்.

தேவர்களை காக்க விஷத்தை உண்டார் சிவன். அகில உலகும் இவருள் இருப்பதால் ஜீவராசிகள் துன்பபடாமல் இருக்க கருணை உள்ளம் கொண்ட அம்பிகை சிவபெருமான் கழுத்தை தடவ விஷம் அங்கேயே நின்றது.

அனைவரது கலக்கமும் நீங்க பெற்று, அவர்கள் மகிழ்ச்சி அடையும் படி ரிஷபத்தின் கொம்பு களின் நடுவில் நடனம் ஆடினார்.

இவ்வாறு அருள் செய்த நேரமே ‘பிரதோஷ வேளை’ எனப்படுகிறது. இவ்வாறு அருள்புரிந்த நேரம் மாலை நேரம் 4.30 – 6.00 மணிவரை. இது நடந்த நாள் சனிக்கிழமை என்பதால் சனிப்ரதோஷம் சிறப்பானதாக கூறப்படுகிறது.

பிரதோஷங்கள் 5 வகை:

நித்ய பிரதோஷம் : தினமும் சூரியன் மறையும் முன் ஒன்றரை மணியிலிருந்து நக்ஷத்திரம் தோன்றும் காலம் வரை.

    பக்ஷ பிரதோஷம் : வளர்பிறை த்ரியோதசியில் வருவது.
    மாத பிரதோஷம் : தேய் பிறை திரியோதசியில் வருவது.
    மஹா பிரதோஷம் : சனிக்கிழமையில் வரும் பிரதோஷம்.
    பிரலய பிரதோஷம் : உலகம் முடிவில் உண்டாகும் காலமே.

சோமசூக்தப் பிரதட்சிணம் செய்யும் முறை:
முதலில் நந்தியை வணங்கி, பிறகு அதன் பிரணவ வடிவமான கொம்புகளின் நடுவே சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும்.

அதன் பிறகு வழக்கமாக வலம் வருவதற்கு மாறாக, அப்பிரதட்சிணமாக (எதிர் வலமாக) சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை போய்த் திரும்ப வேண்டும். அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டக் கூடாது!

இதன்பின் போன வழியே திரும்ப வேண்டும். நந்தியை தரிசித்து, தினந்தோறும் செய்யும் வழக்கப்படி வலம் வர வேண்டும். அப்போதும், அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டாமல் அப்படியே திரும்பி, நந்தி வரை வர வேண்டும். இந்த முறைப்படி மூன்று தடவை செய்ய வேண்டும். இதுவே ‘சோமசூக்தப் பிரதட்சிணம்’.

ஆலயங்களில் பிரதோஷ வேளையில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரர் ரிஷப வாகனத்தில் மூன்று முறை வலம் வருவார். முதல் சுற்றில் வேத பாரயணமும் இரண்டாம் சுற்றில் திருமுறை பாராயணமும் மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இசையுடன் வலம் வருவார்.

பிரதோஷ காலத்தில் முறைப்படி வழிபட்டால், வியாதி, கடன்,.அகால மரணம், வறுமை முதலியன நீங்கி முக்தி கிடைக்கும்.

பிறவா திருக்க வரம்பெறல் வேண்டும் பிறந்துவிட்டால்

இறவா திருக்க மருந்துண்டு காண்இது எப்படியோ

அறமார் புகழ்த்தில்லை அம்பல வாணர் அடிக்கமலம்

மறவா திருமனமே அது காண்நெல் மருந்தெனக்கே ……

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

நிலவுலாவிய நீர்மலி வேணியன்

அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்

மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் .

‘ நம சிவாய வாழ்க ‘

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து……

……. ஸ்ரீ

20 வகை பிரதோஷங்களும். அதன் வழிபாடு பலன்களும்

மொத்தம் 20 வகை பிரதோஷங்கள்

1. தினசரி பிரதோஷம்
2. பட்சப் பிரதோஷம்
3. மாசப் பிரதோஷம்
4. நட்சத்திரப் பிரதோஷம்
5. பூரண பிரதோஷம்
6. திவ்யப் பிரதோஷம்
7. தீபப் பிரதோஷம்
8. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்
9. மகா பிரதோஷம்
10. உத்தம மகா பிரதோஷம்
11. ஏகாட்சர பிரதோஷம்
12. அர்த்தநாரி பிரதோஷம்
13. திரிகரண பிரதோஷம்
14. பிரம்மப் பிரதோஷம்
15. அட்சரப் பிரதோஷம்
16. கந்தப் பிரதோஷம்
17. சட்ஜ பிரபா பிரதோஷம்
18. அஷ்ட திக் பிரதோஷம்
19. நவக்கிரகப் பிரதோஷம்
20. துத்தப் பிரதோஷம்

1.தினசரி பிரதோஷம்

தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.

2. பட்சப் பிரதோஷம்

அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட லிங்கம் மைலாப்பூர், மயிலாடு துறை போல்] செய்வது உத்தமம் ஆகும்.

3. மாசப் பிரதோஷம்

பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் “பாணலிங்க” வழிபாடு [பல்வேறு லிங்க வகைகளில் பான லிங்கம் ஒரு வகை] செய்வது உத்தம பலனைத் தரும்.

4. நட்சத்திரப் பிரதோஷம்
பிரதோஷ திதியாகிய “திரயோதசி திதி”யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

5. பூரண பிரதோஷம்

திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது “சுயம்பு லிங்கத்தை”த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.

6. திவ்யப் பிரதோஷம்

பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது “திவ்யப் பிரதோஷம்” ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

7. தீபப் பிரதோஷம்
பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.

8. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்

வானத்தில் “வ” வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, “சப்தரிஷி மண்டலம்” ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும்.

இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.

9. மகா பிரதோஷம்

ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் “மகா பிரதோஷம்” ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.

குறிப்பாக திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள, “தண்டீசுவர ஆலயம்”. திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள “திருப்பைஞ்ஞீலி” சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள “ஸ்ரீவாஞ்சியம்” சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள “திருக்கோடி காவல்” சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், “மகா பிரதோஷம்” எனப்படும்.

10. உத்தம மகா பிரதோஷம்

சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

11. ஏகாட்சர பிரதோஷம்

வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.

12. அர்த்தநாரி பிரதோஷம்

வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

13. திரிகரண பிரதோஷம்

வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

14. பிரம்மப் பிரதோஷம்

ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

15. அட்சரப் பிரதோஷம்

வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்’ என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

16. கந்தப் பிரதோஷம்

சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.

17. சட்ஜ பிரபா பிரதோஷம்

ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. தேவகியும் வசு தேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

18. அஷ்ட திக் பிரதோஷம்

ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

19. நவக்கிரகப் பிரதோஷம்

ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

20. துத்தப் பிரதோஷம்

அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.